தமிழகத்தில் முதல்முறையாக 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு: மிக ஆபத்தான நிலையில் சென்னை

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், இதில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2,526 பேர்களுக்கும் சென்னையில் 1082 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கொரோனாவால் சென்னையில் மட்டும் 176 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 பேர்களும், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் , மதுரை, நாகை, தஞ்சை, விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் உயிரிழந்தவரின் வயது 98 என்பது குறிப்பிடத்தக்கது.