இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் 15 அர்ச்சகர்கள் உள்பட திருப்பதியில் மட்டும் சுமார் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் தலைமை அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் திருப்பதியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்று முதல் அதாவது ஜூலை 21முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத்குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்

இதனால் திருப்பதி நகர் முழுவதும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் 11 மணிக்கு பின்னர் பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி நகர பொதுமக்கள் காலை 11 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது