1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கிளைமாக்ஸ்.. அன்பறிவ் மாஸ்டர்களுடன் ஷங்கர் ஆலோசனை..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் கிளைமாக்ஸ் 1000 ஸ்டண்ட் கலைஞர்களுடன் கூடிய ஸ்டண்ட் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவ் மாஸ்டர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜாவின் ‘கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அவர் தனது திரையுலக வாழ்வில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜாவின் ’கேம் சேஞ்சர்’ இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரும் 24ஆம் தேதி படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த ஸ்டண்ட் காட்சியில் 1000 ஸ்டண்ட் கலைஞர்கள் ராம்சரணுடன் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு இதுவரை இல்லாத அளவில் இந்த காட்சி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாள் கணக்கில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்களுடன் ஷங்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவில் சமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.