கொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர் 

தனக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாக தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பியதால் விரக்தி அடைந்த மதுரை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கூலி தொழில் செய்து வந்த முஸ்தாபா என்ற மதுரை வாலிபர் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பித்ததை அடுத்து மதுரை திரும்பினார். அவருக்கு சளி இருமல் காய்ச்சல் ஆகியவை இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்து அவரையும் அவரது தாயையும் சரக்கு வாகனத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தினார். இருப்பினும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறி அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பரப்பி விட்டனர். இந்த வீடியோவை பார்த்து மனம் உடைந்த வாலிபர் முஸ்தாபா, சென்னையிலிருந்து வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.