தேசிய மருத்துவர்கள் தினத்தில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்… வெடிக்கும் சர்ச்சை!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

ஒடிசாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை உணவு கொடுக்க சென்ற தாபாவின் ஊழியர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா நேரத்தில் மருத்துவர்களின் பங்கு குறித்து அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள செண்டிபதா எனும் இடத்தில் உள்ள தாபாவிற்கு சென்ற இளைஞர் ஒருவர், அங்கு உணவைச் சாப்பிட்டு உள்ள மருத்துவர்கள் குடியிருப்பில் இருக்கும் தனது சகோதரிக்கும் உணவை பார்சல் கொடுக்குமாறு தாபா ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் தாபா உரிமையாளரின் மகன் சுகந்தா பெகெரா(35) என்பவர் அன்று இரவு 11 மணிக்கு மருத்துவக் குடியிருப்புக்குச் சென்று இருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்(32) மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரை பாலியல் வன்புணர்வு செய்ததோடு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி இருக்கிறார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் மருத்துவர் மறுநாள் காலை தனது சகோதரருடன் காவல் நிலையத்திற்கு சென்று சுகந்தா பெகெரா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து சுகந்தா பெகெரா கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடு முமுவதும் மருத்துவர்களின் சேவையை பாராட்டி வரும் நிலையில் ஒடிசாவில் நடைபெற்ற சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.