குரங்கணி தீ விபத்து: தற்செயலா? சதியா? விசாரணை செய்ய கமிஷன் நியமனம்
- IndiaGlitz, [Friday,March 16 2018]
தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் டிரெக்கிங் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என இன்று வரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த தீவிபத்து தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது சதியா? அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்ய அதுல்ய மிஸ்ரா தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கமிஷன் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை செய்து தனது அறிக்கையை அரசுக்கு கொடுக்கும்
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று அனைத்து வசதிகளையும் இதுவரை செய்து கொடுத்து வந்தது கொழுக்குமலை எஸ்டேட் நிர்வாகம். இந்த விசாரணையால் இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் வருமானம் பாதிக்கும் என தெரிகிறது. மேஜிக்கல் சன்ரைஸ்; ட்ரெக்கிங் சொர்க்கம்; இயற்கையின் வனப்பை கண்டு களிக்கும் வசதி; சுவையான உணவுகள் என சுற்றுலா பயணிகளை ஈர்க்க கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வரும் இந்த எஸ்டேட் மீது விசாரணை நடைபெறும் என தெரிகிறது
மேலும் இந்த தீவிபத்துக்கு முன்பே பல சுற்றுலா பயணிகள் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்திருப்பதாகவும், ஒருசிலர் காணாமல் போயிருப்பதாகவும், இந்த விசாரணண கமிஷன் அதுகுறித்தும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக உள்ளூர் பழங்குடி மக்களை அழைத்துச் செல்வது மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். வனத்தின் சூழல்களையும் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிந்த அவர்களுடன் வனப்பகுதிக்கு செல்வது பாதுகாப்பானது. ஆனால் சுற்றுலாவுக்கு அழைத்து செல்பவர்கள் இதை கடைபிடித்தார்களா? என்பதையும் கமிஷன் தான் கண்டுபிடிக்க வேண்டும்.